துணை நடிக நடிகையர் நாடோடி மன்னனில் நடித்தது போல் அக்கறையாகவும், பொறுப்போடும் வேறு படங்களில் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள நடிப்புத் திறமை, பேச்சுத்திறமை, அத்தனையையும் வெளிக்காட்டப் போட்டி போட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.
காவல் வீரர் முதல், கேணியிலே தண்ணீர் இறைக்கும் பெண் வரை போட்டியிட்டு ஒருவரையொருவர் மிஞ்சுகின்றனர் என்பதை வெளியிடும்போதே… யாரும் சொல்லாமல் வெற்றி இவர்களுக்கே என்று வெளிப்படுகிறதே!.
கும்பன், நிகும்பன் – இவர்கள் இந்தப் படத்தின் கடைசிப் பகுதியில் கூட ஒரு திருப்பத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று அஞ்சும்படி செய்கிறார்கள்.
கும்பன் பாகமேற்ற திரு.என்.எஸ்.நடராசன் பல ஆண்டுகளாகச் சினிமா உலகத்தில் பணியாற்றி வருபவர். இதுவரை அவரை யாருமே சரிவரப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நாடோடி மன்னன் அவருடைய திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு…. இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது இவருடைய பாத்திரத்தைக் கண்டதும், எஜமானுக்கு நம்பிக்கையுள்ள ஊழியனாகவும், கொள்ளை கொலைக்கு அஞ்சாத பாதகனாகவும், முரடனாகவும் உள்ள ஒருவனைப் பல கதைகளில் சந்தித்திருப்போம் படித்தபோது…
அத்தனை கதைகளில் உள்ள பாத்திரங்களையும் ஒன்றாக்கி உருக்கொடுத்தால் எப்படியிருப்பானோ அதுபோல் என்.எஸ்.நடராசன் அவர்கள் காட்சி அளிக்கிறார். அதனால்தான் இவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தை (நடராசன் அவர்களையல்ல) எங்கோ சந்தித்திருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மக்களுக்கு வெறுப்பளிக்கும் பாத்திரத்தை ஏற்று, மக்கள் அருவருப்படைந்தாலும் அதே நேரத்தில் “அந்த ஆள் சரியான ஆள்டா” என்று பேசும்படி செய்த நடராசன் அவர்களுக்கு, அவர் வாழ்க்கையில் இது முதல் தரமாகக் கிடைத்த வெற்றியாகும்.
இன்னொருவன் தானே சிந்திக்கத் தெரியாதவன்; தனித்து இயங்காதவன். எஜமான் சொல்வதைச் செய்வான்; ஆனால் அதற்கும் துணை வேண்டுபவன். வலிவுண்டு;அறிவில்லை. திறமையுண்டு; சிந்திக்கத் தெரியாது. ஏன் செய்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியாது. இப்படிப்பட்டவன்தான் நிகும்பன். இந்தப் பாத்திரத்தைத் திரு.குண்டுமணி ஏற்று நடித்திருக்கிறார்.
திரு.குண்டுமணியும் பல ஆண்டுகளாகச் சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர். சண்டைக் காட்சிகளில் ஒழுங்காகவும், திறமையாகவும் பணியாற்றுபவர். மரியாதையும் அன்புள்ளமும் கொண்டவர். இவருடைய குணத்திற்கு நேர்மாறான வேடம்; ஆனால் உருவத்திற்கு மிகமிகப் பொருத்தமான வேடம்! இதை இவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் பாத்திரம் தானும் தோற்று, தன்னை நம்பியவர்களையும் தோல்விக்கு இழுத்துச் சென்றிருக்கும். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதிலிருந்தே இவர் தோல்வியைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்றுவிட்டார் என்பது புரியுமே….
சண்டைக் காட்சிகளிலே ஈடுபட்டவர்களைத் தனித் தனியாய்க் குறிப்பிட முடியவில்லை. ஆனால் சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கின்றனவென்றால் அதற்கு இவர்கள் தான் காரணம். நன்றாக இருக்கிறது என்று தோல்வி அடைந்ததையா கூறுவார்கள் ! ஆகவே இவர்களுக்கு இவர்களுடைய பணியில், உழைப்பில் வெற்றி கிடைத்து விட்டது என்று கூசாமல் கூறலாம்.
<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>
முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”http://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/” target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.




Pingback: நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் « எம்.ஜி.ஆர்