ஆண் நடிகர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது படத்தில் தோன்றும் வரிசைப்படியே துவங்குகிறேன். திரு.பி.எஸ்.வீரப்பா அவர்கள் குருநாதராகவும், தீவின் தலைவராகவும் நடிக்கிறார்….யாருக்கும் தலை வணங்காதவராகவும், தன் அறிவு முதிர்ச்சியில் அசையா நம்பிக் கொண்டவராகவும், தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள எந்தச் சூழ்ச்சியையும் செய்யத் தயாராக இருப்பவராகவும், தன்னைத்தவிர மற்றெல்லோரையும் முட்டாளாகக் கருதுபவராகவும், கர்வம், சுயநலம், கொலைத்தன்மை முதலிய கொடுங் குணங்களுக்கிருப்பிடமாகவும் உள்ள அரசகுருவின் பாத்திரத்தை ஏற்று, உடை, ஒப்பனை முதலியவைகளில் வழக்கத்திற்கு நேர் எதிராக மாறுதலுடன் புதுமுறையில் தோன்றி, மக்களைத் திகைக்கும்படி செய்துவிட்டார் என்று சொல்வதைவிட வேறு பொருத்தமான வார்த்தை எனக்குத் தெரியவில்லை.
சாதாரணமாக அவரை எதிர்பார்ப்பார்கள் அமைச்சர்,தளபதி, தம்பி, அண்ணன், அரசப் பிரதிநிதி மாதிரியான வேடங்களில்.
பல படங்களிலே பயங்கரமாக அவரைச் சிரிக்கச் சொல்வதுண்டு ; அவரும் அப்படி சிரிப்பதுண்டு. இந்தப்படத்தில் நான்அவரை அது போல் சிரிக்கவும் சொல்லவில்லை; அவர் சிரிக்கவுமில்லை!.
கர்வத்தின் சாயல் பூரணமாகப் படிந்த நடை , பெருமிதத்தில் வெளிவரும் பேச்சுக்கள், ஆத்திரம் வந்தாலும் கைப்பிரம்பைத் தன் தொடையிலே உருட்டியபடி அதை மறைக்கும் சாகசம்… இவை போன்ற பலதரப்பட்ட சிறந்த நடிப்புத் திறனால் குருநாதரின் வேடத்திற்கே ஒரு புதிய பொலிவை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். படம் முழுவதும் அவர் காண்பித்திருக்கும் அக்கறை வெளிப்படுகிறது. வில்லனாக நடிக்கும் இவர் தன்னுடைய கலைப் பிரயாணத்தில் புதியதொரு பாதையில் வெற்றி நடைபோடுகிறார் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?
திரு.எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் எனது மூத்த சகோதரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அநேகமாக இவர், பிறரைக் கெடுக்கும் பாகத்தையே தாங்கி நடித்திருக்கிறார். கார்மேகம் என்ற பாகத்திலோ திருந்தி நன்மையும் செய்பவராக மாறுகிறார். ஆகவே இவருக்கு இந்த வேடம் ஒரு புதுமை என்பதோடு, தன் தலையைத் தடவியபடி எதிரிகளின் தலையையும் தடவி விட முடிந்த இவருக்கு இதைவிட இப்போது பெரிய வெற்றி வேறெதும் இருக்க முடியாது.
<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>
முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”http://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/” target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.




Pingback: நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் « எம்.ஜி.ஆர்
Pingback: நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் « எம்.ஜி.ஆர்